மருந்துக்கு சவால் விடும் மலேரியா
என்னை யாரும் அசைக்க முடியாது என ஒவ்வொரு கிருமியும் மருத்துவ அறிவியலுக்கு பெப்பே காட்டுவது வாடிக்கையாகத் தொடர்கிறது. அதில் ஒன்று, கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா. மிகவும் சக்தி வாய்ந்த சிகிச்சையினால் கூட இதை ஏன் கட்டுப்பட வைக்க முடியவில்லை என்று தலையைப் பிய்த்துக் கொண்டு ஆராய்ந்த விஞ்ஞானிகள், இப்போது இதற்குக் காரணங்களைக் கண்டறிந்து இருக்கிறார்கள்.
‘நேச்சர் ஜெனடிக்ஸ்’ என்ற பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரை இதை விவரிக்கிறது. ‘விரைந்து பரிணாம வளர்ச்சி கண்டுவரும் மலேரியா ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த 1950களிலிருந்தே தொடர்ந்து ஒன்று மாற்றி ஒன்று என பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துகள் யாவும் பயனற்றதாகி விட்டன. ஒவ்வொரு முறையும், இந்த மலேரியா ஒட்ண்ணிகளிடமிருந்து இந்த மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி விடுகிறது.
இது தாய்லாந்து - கம்போடியா எல்லையிலேயே உருவாகி, அதன் பின்னர்தான் இந்த எதிர்ப்பு சக்தி பெற்ற மலேரியா ஒட்டுண்ணிகள் ஆப்ரிக்காவுக்கும் பிற இடங்களுக்கும் பரவின’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த மரபணு மாற்றங்கள்தான் இந்த ஒட்டுண்ணிகள் ஒழிக்கப்படுவதிலிருந்து தப்ப உதவுகின்றன. இந்த மரபணு மாற்றம் எப்படி நடக்கிறது என ஆராய்ந்து வருகிறார்கள்.உண்மையில் நோய் தடுப்பு மருந்துகள் அப்டேட் ஆகின்றனவோ, இல்லையோ... மருந்தை எதிர்கொள்ளும் கிருமிகள் படு வேகமாக தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன!
கருத்துகள்
கருத்துரையிடுக